Friday 22 February 2013

“கோபல்ல கிராமம்” நாவல் பற்றி...

கி.ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” பற்றி திருமதி.ஜெயந்தி அவர்களின் வாசிப்பனுபவம்.

இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது, சுமார் 70 வருடங்களுக்கு முன் இருந்த நம் இந்திய கிராமத்திற்கு, ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கி, கிராமத்து சூழலை அனுபவித்த அருமையான உணர்வு ஏற்பட்டது.

மற்றபடி, அதிக ஆசை அழிவுக்குக் காரணமாகிவிடும் என்பதையும், பெண்களைப் போற்றி, பாதுகாத்த எந்தக் குடும்பமும் எப்பொழுதும் உயர்ந்தே இருக்கும் என்பதையும், உழைப்பே உயர்வைத் தரும் என்பதையும், இக்கட்டான நேரத்தில் கூட நல்ல எண்ணம் நற்பண்பு மனிதனுள் இருக்க இயற்கையும், இறையும் துணை புரியும் என்ற பல கருத்துகள் மிகுந்த இந்த நாவலைப் படித்து உணர இனிமையாக இருந்தது.

புத்தக விவரம்: கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

Sunday 17 February 2013

என் இலக்கிய நண்பர்கள் - நூல் அறிமுகம்

பிப்ரவரி 09, 2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் தோழர் முனைவர். வா.நேரு அவர்களால், ந.முருகேச பாண்டியன் அவர்கள் எழுதிய ”என் இலக்கிய நண்பர்கள்” என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு இலக்கிய ஆளுமைகளுடன் ஆசிரியருக்குண்டான அறிமுகம் மற்றும் நட்பைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். நூலின் முன்னுரையில் நட்பின் மேன்மை பற்றியும், உயிருக்குயிரான சிநேகம் என்று நம்பியவர்களில் சிலர் காலவெளியில் காணாமல் போனது பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலில் சமகால இலக்கிய நண்பர்களைப் பற்றிய தனது கருத்தையும், விமர்சனத்தையும் முன்வைக்கும் போது ஏற்படும் தர்மசங்கடங்களைத் தான் அறிந்து இருப்பதாகவும், தன் நண்பர்களை நட்பையும், விமர்சனத்தையும் பிரித்துணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சனைப் பற்றிக் கூறும் போது, பெரியவர்களுடனான தனது நட்பை வைத்து பிழைப்பு தேடிக் கொள்ளத்தெரியாத வெள்ளந்தியானவர் என்றும் தன்னை சந்திக்க வருபவர் எந்த இலக்கிய அறிவுமின்றி ஏதாவது உரையாடிக் கொண்டிருந்தாலும், அவர் மனம் நோகக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார். அவரது படைப்புகளில் விரியும் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. பிரபல சிறுகதை ஆசிரியர் என்ற பிம்பத்தை தனக்குள் ஏற்றிக் கொள்ளாமல எப்போதும் வேடிக்கையுடனும் கேலியுடனுமே வாழ்வை எதிர் கொள்பவர். வாழ்வின் சகல சூத்திரங்களையும் தந்திரங்களையும் கூட அறிந்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க அக்கறையற்று புதிய தளங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் பிரபஞ்சன் என்றும் விளக்கியுள்ளார்.

தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையான நகுலன் பற்றியும் இறுதிக்காலத்தில் அவரது தனிமை பற்றியும், குடும்ப அமைப்பில் சிக்கிக் கொண்டு ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் பற்றிய அவரது பார்வை பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். அவரது இறுதி நாட்களில் மரணம் குறித்து அவர் கொண்டிருந்த பயத்தைப் பற்றியும், நினைவு தவறிய பின் ஏற்கனவே அறிமுகமானவர்களை அடையாளம் காண அவர் பட்ட சிரமங்களைப் பற்றியும் கூறியுள்ளார்.

நாடக ஆசிரியர் மு.ராமசாமி அவர்களைக் குறிப்பிடும் போது, இளவயதிலிருந்தே நவீன நாடகங்களில் தீவிர ஈடுபாடு உடையவர் என்றும், ஆனால் தான் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பிற்கு அவரது செயல் தீவிரம் குறைந்து விட்டது என்றும், இன்று பத்தோடு ஒன்றாக ஒரு துணை நடிகரைப் போல ஆகி விட்டார் என்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எழுத்தாள இரட்டையர்கள் பிரேம்-ரமேஷ் அவர்களைப் பற்றி, இடைவிடாத உரையாடல்களால் மனம் கவர்ந்தவர்கள் என்றும், போலி கவுரவத்திற்கு மரியாதை தராதவர்கள் என்றும் சிறுபத்திரிக்கை உலகின் உள்ளரசியலைத் தாண்டிய வெளிப்படையான மனிதர்கள் என்றும் கூறியுள்ளார்.

கவிஞர் கலாபிரியா, ஒரு காலத்தில் அவர் மீதிருந்த பிரமிப்பு கால ஓட்டத்தில் அவரது சமரச சூழ்நிலையால் அடிபட்டுப் போயிற்று என்று கூறியுள்ளார். குற்றாலத்தில் தொடர்ச்சியாக அவர் நடத்தி வந்த இலக்கிய நிகழ்வான “பதிவுகள்” மூலம் அவர்களுக்குள்  வேர்விட்ட நட்பு இன்றும் தொடர்வதாகவும், கலாப்ரியாவுடனான நட்பு என்றும் தனக்கு பெருமிதம் தருவதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தில் கடினத்தை வருத்தி வரவழைக்கும் கோணங்கி அவர்கள் பற்றியும், இயல்பான குடும்ப சூழ்நிலை மட்டுமன்றி மொத்த குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் பண்புடைய வண்னநிலவனின் தன்னடக்கம் பற்றியும் தனித்தனி கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் பிரபஞ்சன், நகுலன், விக்ரமாதித்யன், பிரேம்-ரமேஷ், மு.ராமசாமி, கலாப்ரியா, ராஜமார்த்தாண்டன், கோணங்கி, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, மணா, அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ப.சிங்காரம், கந்தர்வன் என்று பதினைந்து இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள் பற்றியும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: என் இலக்கிய நண்பர்கள்
ஆசிரியர்: ந.முருகேச பாண்டியன்
வெளியீடு: உயிமை பதிப்பகம்
விலை: ரூ 70. பக்கம்: 120.

நூல் அறிமுகம் முனைவர் வா.நேரு.

தொகுப்பு: வி.பாலகுமார்.

Wednesday 13 February 2013

நல்ல நூல்கள் நல்ல நண்பன்! களம் -11


வாசிப்போர்களம் நல்லமுறையில் இயங்குவதாக பல தோழர்களிடமிருந்து பாராட்டுக் கிடைத்துள்ளது.  நல்ல நூல்களை வாசிப்பதும், கேட்பதும்  மனதை பக்குவப் படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாத கூட்டத்தில் "தெற்கிலிருந்து " என்னும் நூலினை தோழர் மு.சங்கையா முதலில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து ' எனது இலக்கிய நண்பர்கள் ' என்னும் நூலினை தோழர் வா. நேரு அறிமுகம் செய்தார்.
இனி,

நூலின் தலைப்பு : "தெற்கிலிருந்து'- சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள்
நூலின் ஆசிரியர் :  பொன்னீலன்
வெளியீடு              : மக்கள் வெளியீடு
முதல் பதிப்பு        : நவம்பர் 2001
மொத்த பக்கங்கள் : 200 , விலை ரூ 60

                                         தெற்கிலிருந்து நூலின் அறிமுகத்தினை, அந்த நூலின் ஆசிரியர் பொன்னீலன் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டு ஆரம்பித்தார் தோழர் மு.சங்கையா. கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினைச்சேர்ந்தவர் , சமூக அக்கறையுடன் நிறைய நூல்களை எழுதியுள்ள பொன்னீலனின் 8 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்பதனைக் குறிப்பிட்டார். 

                                  முதல் கட்டுரையான இந்தியச்சாதி அமைப்பு. சாதியின் முதல் பண்பான அதனுள் இயங்கும் இரத்த உறவு, இரண்டாவது பண்பான பரம்பரையாக சாதியை தொடர்புபடுத்தும் தொழில் , சாதி என்பது  ஒரு ஒடுக்குமுறை அமைப்பு ஏன் ? சாதி எவ்வாறு உருவானது போன்றவை பற்றி பல்வேறு ஆய்வாளர்கள் தருகின்ற கருத்துக்களை பொன்னீலன் குறிப்பிடுகின்றார். வர்ணம் என்பது எப்படி வலுப்பெற்றது? ரிக் வேதத்தில் வர்ண முறை பற்றிய குறிப்புகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு " வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் பரம்பரைகளே சாதிகள் என்கிறது மனுதர்மம்" என்பதனைக் குறிப்பிட்ட தோழர் சங்கையா "ஒரு ஆண் தன் வர்ண அடுக்குக்கு மேல் உள்ள அடுக்கில் பெண் எடுப்பதை இந்து தர்மம் முற்றாகத் தடுக்கிறது, ஆனால் தனக்குக் கீழே உள்ள அடுக்கில் பெண் கொள்ளும்போது , அவை புதிய சாதிகளாக உருவாயின " என்று கூறுவதைக் குறிப்பிட்டார். இந்தியச்சாதி அமைப்பு பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறும் ஆசிரியர் பொன்னீலன் தனது கருத்தாக, முடிவாக இதுதான், இப்படித்தான் இந்தியச்சாதியின் தோற்றம் என்று கூறவில்லை என்பதனைக் குறிப்பிட்டார். 

                                  இரண்டாவது மூன்றாவது  கட்டுரைகளான  'தெற்கில் முதல் வெளிச்சம் மற்றும் 'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் ' பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம், சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள், மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம், அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் , நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமை, அவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ? எனத் தோழர்கள் கேள்வி எழுப்பி, அறிந்து கொள்ள உதவியது.

                            வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் , நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள், அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899)  போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை, நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது  போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார். 

                             தொடர்ந்து  நூலில் உள்ள கட்டுரைகளான நாராயண குரு, அய்யன் காளி பற்றிக் குறிப்பிட்ட தோழர் சங்கையா வைகுண்டசாமி, நாராயண குரு போன்றவர்கள் அமைதியான வழியில் , ஆன்மிகத்தின் வழியாக சாதியை ஒழிக்க முயற்சி செய்தவர்கள், அய்யன் காளி(1863)  மக்களைத் திரட்டி, போராட்டத்தின் வழியாக சாதி ஒழியப் பாடுபட்டவர் என்பதனைக் குறிப்பிட்டார். 1871-81 40000 புலையர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள் , கல்மாலை அறுப்புப்போர் என்பதனை 1915-1916 களில் மக்களைத் திரட்டி மகான் அய்யன் காளி நடத்தினார் என்பதனைக் குறிப்பிட்டார்
.
தொகுப்பு: முனைவர்.வா.நேரு.
(எனது இலக்கிய நண்பர்கள் பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும்)

Wednesday 6 February 2013

தோழர்களே நலமா?


வாருங்கள்!  09/02/2013 ந் தேதி மாலை 04-30 மணிக்குச் சந்திப்போம்! சிந்திப்போம். ஆம்! நமது சிந்தனைக்கு நல்ல நூல்கள் காத்திருக்கின்றன!

தோழமையுள்ள
சு.கருப்பையா.