வாசிப்போர்களம் நல்லமுறையில் இயங்குவதாக பல தோழர்களிடமிருந்து பாராட்டுக்
கிடைத்துள்ளது. நல்ல நூல்களை வாசிப்பதும், கேட்பதும் மனதை பக்குவப் படுத்துகிறது என்பது மறுக்க
முடியாத உண்மை. இந்த மாத கூட்டத்தில் "தெற்கிலிருந்து " என்னும் நூலினை தோழர்
மு.சங்கையா முதலில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து ' எனது இலக்கிய
நண்பர்கள் ' என்னும் நூலினை தோழர் வா. நேரு அறிமுகம்
செய்தார்.
இனி,
நூலின் தலைப்பு :
"தெற்கிலிருந்து'- சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள்
நூலின் ஆசிரியர் : பொன்னீலன்
வெளியீடு
: மக்கள்
வெளியீடு
முதல் பதிப்பு : நவம்பர் 2001
மொத்த பக்கங்கள் : 200 , விலை ரூ 60
தெற்கிலிருந்து நூலின் அறிமுகத்தினை, அந்த நூலின் ஆசிரியர் பொன்னீலன் பற்றிய செய்திகளைக்
குறிப்பிட்டு ஆரம்பித்தார் தோழர் மு.சங்கையா. கலை இலக்கியப் பெருமன்றத்தின்
பொறுப்பாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினைச்சேர்ந்தவர் , சமூக அக்கறையுடன் நிறைய நூல்களை எழுதியுள்ள பொன்னீலனின் 8 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்பதனைக் குறிப்பிட்டார்.
முதல் கட்டுரையான
இந்தியச்சாதி அமைப்பு. சாதியின் முதல் பண்பான அதனுள் இயங்கும் இரத்த உறவு, இரண்டாவது பண்பான பரம்பரையாக சாதியை தொடர்புபடுத்தும் தொழில் , சாதி என்பது ஒரு ஒடுக்குமுறை
அமைப்பு ஏன் ? சாதி எவ்வாறு உருவானது போன்றவை பற்றி பல்வேறு
ஆய்வாளர்கள் தருகின்ற கருத்துக்களை பொன்னீலன் குறிப்பிடுகின்றார். வர்ணம் என்பது
எப்படி வலுப்பெற்றது? ரிக் வேதத்தில் வர்ண முறை பற்றிய குறிப்புகள்
போன்றவற்றைக் குறிப்பிட்டு " வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் பரம்பரைகளே
சாதிகள் என்கிறது மனுதர்மம்" என்பதனைக் குறிப்பிட்ட தோழர் சங்கையா "ஒரு
ஆண் தன் வர்ண அடுக்குக்கு மேல் உள்ள அடுக்கில் பெண் எடுப்பதை இந்து தர்மம்
முற்றாகத் தடுக்கிறது, ஆனால் தனக்குக் கீழே உள்ள அடுக்கில் பெண்
கொள்ளும்போது , அவை புதிய சாதிகளாக உருவாயின " என்று
கூறுவதைக் குறிப்பிட்டார். இந்தியச்சாதி அமைப்பு பற்றி பல்வேறு கருத்துக்களைக்
கூறும் ஆசிரியர் பொன்னீலன் தனது கருத்தாக, முடிவாக இதுதான், இப்படித்தான் இந்தியச்சாதியின் தோற்றம் என்று கூறவில்லை
என்பதனைக் குறிப்பிட்டார்.
இரண்டாவது மூன்றாவது கட்டுரைகளான 'தெற்கில் முதல்
வெளிச்சம் ' மற்றும் 'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் ' பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர்
சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம், சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக்
கடைப்பிடிக்கப்பட்ட கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு
வரிகள், மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம், அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் , நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமை, அவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை
புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா
எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு
முன்னால் இருந்ததா ? எனத் தோழர்கள் கேள்வி எழுப்பி, அறிந்து கொள்ள உதவியது.
வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர்
சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார்.
கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில்
நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் , நாடார்கள்
கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள், அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874
&1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899) போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக்
குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை, நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி
ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு
வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு
வந்தது போன்ற செய்திகளை
நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார்.
தொடர்ந்து நூலில் உள்ள
கட்டுரைகளான நாராயண குரு, அய்யன் காளி பற்றிக் குறிப்பிட்ட தோழர் சங்கையா
வைகுண்டசாமி, நாராயண குரு போன்றவர்கள் அமைதியான வழியில் , ஆன்மிகத்தின் வழியாக சாதியை ஒழிக்க முயற்சி செய்தவர்கள், அய்யன் காளி(1863) மக்களைத் திரட்டி, போராட்டத்தின் வழியாக சாதி ஒழியப் பாடுபட்டவர் என்பதனைக் குறிப்பிட்டார்.
1871-81 40000 புலையர்கள்
முஸ்லிம்களாக மாறினார்கள் , கல்மாலை அறுப்புப்போர் என்பதனை 1915-1916 களில் மக்களைத் திரட்டி மகான் அய்யன் காளி
நடத்தினார் என்பதனைக் குறிப்பிட்டார்.
தொகுப்பு: முனைவர்.வா.நேரு.
(எனது இலக்கிய நண்பர்கள்
பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும்)